Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2017

திருடன் தம்புடு ! - சிறுகதை


ஏழுகிணறு என்ற ஊரில் கிராமத்து திருவிழா களை கட்டியிருந்தது.

ஒன்பதுநாளும் கூத்து, பாட்டு, நாடகம் இருந்ததால் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
அன்று மிகவும் புகழ்பெற்ற கரகாட்டக்காரிகள் வந்து நடனம் ஆடி இளசுகளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கரகாட்டம், மயிலாட்டம் முடிந்ததும், அவர்கள், "டயலாக்' பேசிக் கொண்டே ஆடிய ஆட்டம் இளைஞர்களை விசிலடிக்க வைத்தது.

சவுந்தரம் பாட்டிக்கு இதையெல்லாம் பார்க்க... மனம் கூசியது. நல்லவேளை... என் மகன் தண்டச்சோறு ஊருக்கு போயிருக்கு, இல்லைன்னா... அவனும் இங்க வந்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.

""ஏற்கனவே... செலவுக்கு காசு கொடுக்க மாட்டேன்னு என்னை போட்டு அடிக்கிறான். என்னைக்கு இவன் திருந்தப் போறானோ?'' என்று புலம்பியபடியே வீட்டுக்குப் படுக்க வந்தாள்.

ஊரே தெருக்கூத்தை ரசிக்கும்போது இதுதான் சரியான சமயம் என்பதால், கிழவியின் வீட்டுக்குள் நுழைந்தான் திருடன் தம்புடு.

கிழவி நிறைய காசு பணம் வச்சிருக்கா. அவ புருஷன் நிறைய சொத்து சேர்த்து வச்சிருந்தான். தண்டச்சோறு பிள்ளையை நம்பி சொத்தை ஒப்படைக்காமல், மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.

இது ஊருக்குள் எல்லாரும் அறிந்த விஷயம் என்பதால் கிழவியின் வீட்டுக்குள் நுழைந்தான்.

எல்லாப் பொருட்களையும் மூட்டையில் கட்டிக் கொண்டு திரும்பியவன் கண்களில் சமையலறை பட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. உள்ளே நுழைந்தான். அங்கே கிழவியின் கைவண்ணத்தில் வடை, பாயாசம் என்று அறுசுவை உணவு இருந்தது.

இப்படி ஒரு ருசியான உணவை எங்கே சாப்பிட்டிருக்கிறான் தம்புடு. மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்தான் தம்புடு. அடுத்த நிமிடம் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

சற்று நேரம் உறங்கி விட்டுச் செல்வோம் என்று நினைத்தபடியே படுத்தான். அப்படியே நன்றாக தூங்கிவிட்டான்.

கூத்து பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே எழுந்து வந்த கிழவி, குறட்டை சப்தம் கேட்டதும் தன் மகன்தான் வந்து விட்டான் என்று நினைத்தபடியே வீட்டை திறந்து உள்ளே வந்தவள், தன் வீட்டுக் கட்டிலில் திருடன் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். தன்னுடைய பணம், நகை எல்லாம் மூட்டையாக கட்டப்பட்டு பக்கத்தில் இருப்பதைக் கண்டதும், "பக்' என்றது கிழவிக்கு.

அவன் அருகில் சென்று மெல்ல மூட்டையை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஆட்களைக் கூட்டி வர வெளியே போனாள்.

கதவு திறந்து மூடும் ஓசையில் கண் விழித்த திருடன், சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு, தான் கட்டி வைத்திருந்த மூட்டையைப் பார்த்தான். அது அங்கே இல்லை. மறுநிமிடம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தப்பி ஓடினான் திருடன்.

அதே சமயம் ஊருக்கு சென்ற... கிழவியின் மகன், வீட்டு கதவை திறந்து, ""அப்பாடா'' என்று கட்டிலில் படுத்தான்.

""கிழவிக்கு கூத்து ஒண்ணுதான் குறைச்சல்!'' என்று முணுமுணுத்த படியே போர்வையை எடுத்து நன்கு போர்த்திக் கொண்டாள்.

கட்டிலில் திருடன் படுத்து தூங்குவதாக கிழவி சொன்னதைக் கேட்டு கம்பு, தடியுடன் வந்தவர்கள் கிழவியின் மகனை, திருடன் என்று நினைத்து சரமாரியாக அடித்தனர்.

வலி தங்காமல் போர்வையை எடுத்தான் கிழவியின் மகன்.
அனைவரும் திடுக்கிட்டனர்.

""அய்யய்யோ... என் மகன்!'' என்று சொல்லி கூப்பாடு போட்டாள் கிழவி.

""நீ உன் வயதான தாயை எப்படி அடித்து கொடுமைப்படுத்தினாய்... அதனால் கடவுள் உனக்கு கொடுத்த தண்டனை இது. இனிமேலாவது நல்ல மகனாக நடந்துக் கொள்,'' என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

தாயின் காலில் விழுந்தான் கிழவியின் மகன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.