Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2017

இளவரசிக்கும் எனக்கும் டும் டும் ! - சிறுகதை


முன்னொரு காலத்தில் ஆரவல்லி மலைக்காட்டில் நிறைய பூதங்கள் இருந்தன. அந்தப் பூதங்களின் அரசனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மீது உயிரையே வைத்திருந்தான் அரசன்.
அந்தக் காட்டில் யானை ஒன்று இருந்தது. அது மற்ற விலங்குகளுடனும், பறவைகளுடனும் இனிமையாகப் பழகியது.
ஒருமுறை அது உணவு தேடிச் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று அழுது புலம்புவதைக் கேட்டது.
""ஆந்தையே! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல். என்னாலான உதவி செய்கிறேன்,'' என்று அன்பாகக் கேட்டது யானை.
""யானையே! எனக்குத் தட்டை முகமாம். முட்டை போன்று பெரிய கண்களாம். கர்ண கொடூரமான குரலாம். பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்கிறேனாம். இப்படி எல்லாரும் என்னைக் கேலி செய்கின்றனர். அழகு இல்லாமல் பிறந்ததற்கு நானா காரணம்? எல்லாரும் என்னை வெறுக்கின்றனர். எனக்கு நண்பர்களே இல்லை. வாழவே பிடிக்கவில்லை,'' என்று குலுங்கிக் குலுங்கி அழுதது ஆந்தை.
""ஆந்தையே! உன்னைப் பற்றி யார் அப்படிச் சொன்னார்கள்? அவர்களுக்குப் பித்துத்தான் பிடித்து இருக்க வேண்டும். நீயும் மற்ற பறவைகளைப் போல அழகாகவே இருக்கிறாய்.
""உன்னைப் போன்று இரவில் இயங்கும் ஆற்றல் எந்தப் பறவைக்கு உள்ளது? நீ கண்ணை உருட்டிப் பார்க்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமே... அற்பர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதே... உன்னைப் பற்றி உயர்வாக நினை. நண்பர்கள் இல்லையே... என்று வருந்த வேண்டாம். நான் உன் நண்பனான இருக்கிறேன்,'' என்றது யானை.
அதன் இனிமையான பேச்சைக் கேட்டு, ஆறுதல் அடைந்தது ஆந்தை.
""யானையே! இப்படி யாரும் என்னிடம் அன்பாகப் பேசியது இல்லை. உண்மையான நண்பனான இருப்பேன். உனக்காக உயிரையும் கொடுப்பேன்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது ஆந்தை.
அதன் பிறகு அவை இரண்டும், அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.
வழக்கம் போல அன்றும் அவை இரண்டும் பேசிக் கொண்டிருந்தன.
அந்த வழியாக பூத அரசனும், இளவரசியும் வந்தனர்.
அங்கே யானையைப் பார்த்த இளவரசி, ""அப்பா! நேற்றிரவு என் கனவில் யானை ஒன்று வந்தது. நான் அதைக் கொன்று தின்றேன். அந்த கனவு உண்மையாகுமா? என்ற குழப்பத்தில் இருந்தேன்.
""நான் கனவில் கண்ட அதே யானை இங்கே நிற்கிறது. கனவு உண்மைதான் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் இந்த யானையைக் கொன்று தின்னலாமா? சொல்லுங்கள்,'' என்று கேட்டாள்.
""மகளே! பூதங்களாகிய நாம் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் துன்பம் தருவது இல்லை; எதிர்காலத்தைச் சொல்வதுதான் கனவு. கனவில் நீ இந்த யானையைக் கொன்று தின்று இருக்கிறாய். அதனால் இப்போது நீ இதைக் கொன்று தின்னலாம்.'' என்றான் பூத அரசன்.
அவர்களின் பேச்சைக் கேட்ட யானை, ""ஐயோ! என்ன செய்வேன்? உயிர் பிழைக்க வழி இல்லையே,'' என்று புலம்பியது.
நண்பனுக்கு வந்த ஆபத்தைப் பார்த்தது ஆந்தை. "எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வது? என்று சிந்தித்தது.
நல்ல வழி ஒன்று அதற்குத் தோன்றியது.
""ஆ! என் மனைவி எனக்குக் கிடைத்து விட்டாள். எவ்வளவு காலமாக அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் பாடுபட்டது வீணாகவில்லை. பூத இவளரசி என் மனைவியாகப் போகிறாள். எனக்கும், அவளுக்கும் விரைவில் திருமணம் நிகழப் போகிறது,'' என்று அந்தக் காடு முழுவதும் கேட்குமாறு அலறியது.
அதன் அலறைக் கேட்டாள் பூத இளவரசி. தன் கணவனாகப் போகிறவன் யார் என்று குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
ஆந்தைதான் அப்படிப் பேசியது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாள்.
""அப்பா! இந்த அவலட்சணமான ஆந்தை எனக்கும் அதற்கும் திருமணம் என்கிறதே... அது உண்மையா? நான் இந்த ஆந்தையைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,'' என்று அழுதாள் அவள்.
""மகளே! அழாதே... எத்தனை அரசர்கள் உன்னைத் திருமணம் செய்யக் காத்திருக்கின்றனர்? இந்த ஆந்தைக்கு உன்னைத் திருமணம் செய்து வைப்பேனா? அது ஏதோ உளறுகிறது. அழுவதை நிறுத்து,'' என்றான்.
""அது எப்படி என்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லலாம். அதை விசாரியுங்கள்,'' என்று அழுதபடியே சொன்னாள்.
""நான் விசாரிக்கிறேன்!''
ஆந்தையிடம் சென்று, ""உனக்கும் என் மகளுக்கும் திருமணமா? ஏன் இப்படி உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?'' என்று கோபத்துடன் கேட்டான் பூத அரசன்.
""அரசே! நான் உளறவும் இல்லை. எனக்குப் பைத்தியமும் இல்லை. என்ன நடந்தது என்பதை உங்களிடம் சொல்கிறேன். நான் நாள்தோறும் தொடர்ந்து ஒரே கனவு கண்டேன்.
""அதில், எனக்கும் அழகிய இளவரசி ஒருத்திக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. கனவு உண்மையாகாது என்று அதைப் பொருட்படுத்தாமல் இருந்தேன். கனவில் பார்த்த அதே அழகியை நேரில் பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அவளிடம் என் கனவைச் சொல்லலாமா? வேண்டாமா? என்று குழம்பி நின்றேன். அவள் உங்களிடம் பேசியதைக் கேட்டேன்.
அவளும் கனவு ஒன்று கண்டிருக்கிறாள். அதை உங்களிடம் சொன்னாள்.
அதற்கு நீங்கள், "எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே சொல்வதுதான் கனவு. கனவில் கண்டது கண்டிப்பாக நடக்கும்' என்றீர்கள். இதைக் கேட்ட நான் என் கனவும் நனவாகப் போகிறது என்று பூரித்தேன். அழகான இளவரசி எனக்கு மனைவியாகப் போகிறாள் என்று குரல் கொடுத்தேன். எனக்கும், இளவரசிக்கும் எப்போது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டது ஆந்தை.
""எனக்கும், இந்த ஆந்தைக்கும் திருமணமா? அப்படித் திருமணம் நடந்தால், நான் உயிருடன் இருக்க மாட்டேன்,'' என் அழுது அடம் பிடித்தாள் அவள்.
""மகளே! கனவு கனவுதான். அது உண்மை என்று நம்புவது பைத்தியக்காரத்தனம். இந்த ஆந்தை கனவில் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் உண்மையில் நடக்குமா? கனவு பொய் என்பதை இதற்குப் புரிய வைப்போம். உன்னைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை அதுவே விட்டு விடும்.
""நீ இந்த யானையைக் கொன்று தின்பது போலக் கனவு கண்டாய். அதை உயிருடன் விட்டுவிடு. அதை இந்த ஆந்தை பார்த்துக் கனவு பொய் என்று அறியட்டும். பிறகும் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உளறட்டும். நாம் யார் என்பதை அதற்குக் காட்டுவோம்,'' என்றான் பூத அரசன்.
""அப்பா! கனவு பொய்தான். இந்த யானையைக் கொன்று, தின்பது போலக் கனவு கண்டேன். நான் அதைத் தின்னப் போவது இல்லை,'' என்றாள்.
""ஆந்தையே! கனவு பொய் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய். இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிடு. மீண்டும் இப்படி உளறினால், உன் உடலில் உயிர் இருக்காது,'' என்றான் பூத அரசன்.
""அரசே! உங்களால் உண்மையைத் தெரிந்து கொண்டேன். இனி இப்படி உளறி திரிய மாட்டேன்,'' என்றது ஆந்தை.
அரசனும், இளவரசியும் அங்கிருந்து சென்றனர்.
தான் உயிர் பிழைத்ததை யானையால் நம்பவே முடியவில்லை.
ஆந்தையை நன்றியுடன் பார்த்த அது, ""இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது.
""உயிர் காப்பான் தோழன். நண்பர்களுக்குள் நன்றி எதற்கு?'' என்று ஆந்தை அங்கிருந்து பறந்தது.
***

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.