Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

டூ இன் ஒன் - உண்மை நிகழ்ச்சி


கதை ஒன்று

ஒரு சிறு பையன். அவனுக்கு வயது பதின்மூன்றுதான் இருக்கும். அவன் நன்றாக வளர்ந்திருக்கவும் இல்லை; திடகாத்திரமாகவும் இல்லை; குள்ளமாக, மெலிதாக இருந்தான்.

அந்த வயதில் அவன் எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்பில் படிப்பதாகவே எல்லாரும் எண்ணுவர். ஆனால், அவன் எட்டாவது ஒன்பதாவது வகுப்புகளை எப்போதோ கடந்து விட்டான். அப்படியானால், அவன் எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கிறானோ? இல்லை. அதையும் கடந்து,

"இன்டர்மீடியட்' வகுப்பையும் கடந்து பி.ஏ., வகுப்புக்கு வந்து விட்டான். ஆம், அவன் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரஸிடென்ஸி காலேஜ்) பி.ஏ., வகுப்பில் சேர்ந்து விட்டான்.

அன்று அக்கல்லூரி யின் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த எலியட் என்பவர் பி.ஏ., வகுப்பிற்குள் வந்தார். தன் இடத்தில் போய் <உட்கார்ந்ததும், வகுப்பை ஒரு பார்வை பார்த்தார். அப்போது அவருடைய கண்களில் அந்தப் பதின்மூன்று வயதுப் பையன் தென்பட்டான். உடனே அவர், ""யாரது இந்தப் பொடியன்? தவறுதலாக இங்கே வந்து விட்டானோ!'' என்று சந்தேகப்பட்டார்.

பிறகு அந்தப் பையனைப் பார்த்து, ""ஏனப்பா, நீ யார்? இங்கே எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார்.

""நான் இந்த வகுப்பில்தான் சார் படிக்கிறேன்,'' என்றான் அந்தப் பையன்.

""என்ன, இந்த வகுப்பில் படிக்கிறாயா! உனக்கு என்ன வயது?''

""பதின்மூன்று சார்''

""பதின்மூன்றா! சரி, நீ "இன்டர்' எங்கே படித்தாய்?'"

""வால்டயரில் சார்!''

""உன் பெயர் என்ன?''

""ராமன்''

இவற்றைக் கேட்டதும், அந்தப் பேராசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் மட்டும்தானா ஆச்சரியப்பட்டார்? எல்லாருமே ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் ஆசிரியர்கள் யாவரும் அவனிடத்தில் அதிகமாக அன்பு காட்டினர். அவன் விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தினர்.

இப்படி, தனது பதின்மூன்றாவது வயதிலேயே எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்த அந்த ராமன் யார்? வேறு யாருமல்ல; நோபல் பரிசு பெற்ற நம் தமிழ் நாட்டு விஞ்ஞானி சர்.சி.வி.ராமனேதான்.

கதை இரண்டு

அந்தப் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி விழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு விழாவிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு நாடகம் நடத்துவர். அந்த நாடகங்கள் ஒவ்வொன்றிலும் சிறு பையன் தவறாமல் நடித்து வருவான். ஒரு நாடகத்தில் அவன் இளவரசர் வேடத்தில் வருவான். இன்னொரு நாடகத்தில், ஆங்கிலச் சிப்பாய் வேடத்தில் வருவான். மற்றொரு நாடகத்தில், அவன் ஜமீன்தாராக வருவான். எந்த வேடம் போட்டாலும் அவனுக்கு அழகாயிருக்கும்; மிகவும் பொருத்தமாயிருக்கும்.

ஒருவனுக்கு அழகும் வேஷப் பொருத்தமும் இருந்து விட்டால் போதுமா? படிப்பு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா?

கட்டாயம் வேண்டும் அல்லவா? அந்த சிறுவனுக்கு அவையெல்லாம் இருந்தன. வகுப்பிலே அவன்தான் முதல்வனாக இருந்தான். நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவும் இருந்தான்.

அவன் மாலைப் பொழுதில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த மாணவர்களில் சிலர் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுவர். இது அந்தச் சிறுவனுக்குப் பிடிக்காது.

""ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள்? இதனால், <உங்களுக்கு என்ன லாபம்?'' என்று அவர்களைச் சிறிது கோபத்தோடு கேட்பான்.

ஒருநாள் விளையாடும்போது அந்தச் சிறுவனே ஒரு கெட்ட வார்த்தையைக் கூறி விட்டான். வேண்டுமென்று அவன் கூறவில்லை. தவறுதலாக அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிவந்து விட்டது. விளையாட்டு மும்முரத்தில் யாரும் அவன் பேசியதைக் கவனிக்க வில்லை. ஆனாலும் அவன் தன் தவறை நினைத்து வருந்தாமலில்லை. விளையாட்டு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஓரிடத்தில் அவன் நின்றான்.

"கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்று நான் மற்றவர்களுக்குக் கூறி வருகிறேன். ஆனால். நானே இன்று கெட்ட வார்த்தை பேசி விட்டேன்! இது பெரும் தவறல்லவா? இனி, இந்த மாதிரி ஒரு நாளும் பேச மாட்டேன், இது சத்தியம்!' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்! அதன் பிறகு அவன் கெட்ட வார்த்தை பேசியதே இல்லை!

சிறுவயதிலேயே ஒழுக்கத்திற்கு அவ்வளவு தூரம் மதிப்புக் கொடுத்ததால் தான், பிற்காலத்தில் அவன் மிகப் பெரிய அறிஞனாக விளங்கினான். ஒரு சிறந்த தேச பக்தனாகத் திகழ்ந்தான்; அந்தச் சிறுவனின் பெயர்தான் தாதாபாய் நவுரோஜி.

நவுரோஜி வகுப்பில் மட்டும்தானா முதல்வராயிருந்தார்? பொதுவாழ்விலும் முதல்வராகவே விளங்கினார். லண்டன் காமன்ஸ் சபையில் அங்கத்தினராகயிருந்த முதல் இந்தியர் நவுரோஜிதான்! பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பேராசிரியராயிருந்த முதல் இந்தியர் நவுரோஜிதான்! பம்பாய் நகரில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றை முதல்முதலில் ஏற்படுத்தியவரும் நவுரோஜிதான். இவை மட்டும் தானா? காங்கிரஸ் மகாசபையை ஏற்படுத்திய முதல் தலைவர்களுள் நவுரோஜியும் ஒருவராக இருந்தார். "சுயராஜ்யம்' என்ற வார்த்தையை முதலில் உபயோகப்படுத்தியவரே நவுரோஜிதான்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.