Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2017

புத்திசாலி அணில் ! - சிறுகதை


உளுந்தூர் பேட்டை தோப்பில் ஏராளமான கொய்யா மரங்கள் இருந்தன. அந்த கொய்யா மரம் ஒன்றில் அணில் வசித்து வந்தது.

ஒருநாள், கொய்யா மரத்தில் அமர்ந்தபடி நன்கு கனிந்த கொய்யாப்பழம் ஒன்றினை சாப்பிட்டுக் கொண்டிருந்தது அணில்.
அந்த நேரத்தில் தோப்பினுள் குரங்கு ஒன்று நுழைந்தது. கொய்யாமரத்தில் இருந்த கொய்யாப்பழங்களை எல்லாம் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமடைந்தது.

உடனே அது தன் கண்ணில் கண்ட கொய்யாப் பழங்களை எல்லாம் தாவி, தாவிப் பறித்தபடி தோப்பில் சுற்றித் திரிந்தது. குரங்கானது கொய்யாப்பழங்களை எல்லாம் நாசம் செய்வதைப் பார்த்ததும் அணில் மிகவும் கவலையடைந்தது.

""குரங்கே! கொய்யாப் பழங்களை எல்லாம் இப்படி நாசப்படுத்துகிறாயே! உனக்குத் தேவைப்படுகிற கொய்யாப் பழத்தை மட்டும் சாப்பிட்டுச் செல்லலாமே!'' என்றது.

""அணிலே! இந்தத் தோப்பு உனக்கே சொந்தமானது என்று நினைத்துக் கொண்டாயா? நான் என்னுடைய விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன். என் நண்பர்களை எல்லாம் அழைத்து வந்து இந்த கொய்யாப் பழங்களை எல்லாம் சேதப்படுத்துவேன். நீ அந்தக் காட்சியைப் பார்!'' என்று கூறியபடி கோபத்துடன் அந்தத் தோப்பை விட்டு வெளி யேறியது.
"குரங்கிடம் நாம் நியாயத்தை தானே எடுத்துரைத்தோம்! ஆனால், அதோ நம்மீது தேவையில்லாமல் ஆத்திரப்பட்டு நண்பர்களையும் அழைத்து வந்து கொய்யாப்பழங்களை எல்லாம் சேதப்படுத்துவேன் என கூறிச் செல்கிறதே! ஒருவேளை அது தன்னுடைய நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து கொய்யாப்பழங்களை சேதப்படுத்தி விடுமோ... இதனை நாம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத்தது அணில்.

உடனே தோப்பை விட்டு வேகமாக புறப்பட்ட அணில், ஓர் மலைப் பகுதியை வந்தடைந்தது. அந்த மலைப்பகுதியில் ஓர் பாறையின் மீது கழுகு ஒன்று அமைதியுடன் அமர்ந்திருந்தது.

அணில் அமைதியுடன் அந்தக் கழுகின் முன்னே போய் நின்றது.
""கழுகாரே வணக்கம்!'' என்றது அணில்.

""அணிலே! வா! வா! நலமாக இருக்கிறாயா? நானும் உன்னைப் பார்க்க வேண்டுமென்று நெடுநாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் இருப்பிடம் எனக்கு எதுவென்று தெரியவில்லை. அதனால்தான் நான் உன்னை சந்திக்க வரவில்லை!'' என்றது கழுகு.

""கழுகே! எனக்கு ஒரு உதவி தேவை... செய்வாயா?'' என்றது அணில்.
""அணிலே! நாம் எத்தனை நாட்களாக பழகி வருகிறோம். நீ என்ன உதவி வேண்டுமானாலும் கேள்! நான் அந்த உதவியை உனக்காக இனிதாக செய்து முடிக்கின்றேன்,'' என்றது கழுகு.

உடனே நடந்த விஷயத்தை கூறியது அணில்.

""ஒருவேளை அது நாளைக்காலையில் தனது நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு கொய்யாத்தோப்பினை சேதப்படுத்த வரலாம். அந்த நேரத்தில் நீ உன்னுடைய நண்பர்களோடு வந்து குரங்குகளை தடுத்திடு,'' என்றது அணில்

""அணிலே! மரங்களை எல்லாம் பாதுகாப்பதும் நம் போன்ற உயிரினங்களின் கடமை தானே! நாளைக் காலையில் குரங்குகள் வருவதற்கு முன்னரே நான் எனது நண்பர்களுடன் அந்த கொய்யாதோப்பிற்கு வந்துவிடுவேன். ஆனால், அந்தக் கொய்யாத்தோப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் நீ எனக்குத் தெரியப்படுத்திடு,'' என்றது கழுகு.

""கழுகே! இந்த மலையடிவாரத்தில் இருந்து நீ மேற்கு பக்கமாக வந்தால் ஓர் ஒற்றைத் தென்னைமரம் நின்று கொண்டிருக்கும். அந்த தென்னை மரத்தின் வடக்கு பக்கமாக சிறிது தூரம் பறந்து வந்தால், நீ கொய்யாத் தோப்பினை வந்தடையலாம்,'' என்றது அணில்.

""இது போதும் அணிலே! நான் இந்த அடையாளங்களின்படியே என் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மிகவும் எளிதாக அந்த கொய்யாத்தோப்பினை வந்தடைவேன். கொய்யா மரங்களை அழிக்க துடித்துக் கொண்டிருக்கும் அந்த குரங்கிற்கும், அதன் கூட்டத்திற்கும் நாம் சரியான பாடம் புகட்டலாம்,'' என்றது கழுகு.

மறுநாள் கழுகானது தனது நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அணில் கூறிய அடையாளத்தின் படியே கொய்யா மரத் தோப்பினை வந்தடைந்தது.

அந்த கொய்யாமரங்களின் பின்னே அணிலும், மற்ற கழுகுகளும், அணிலின் நண்பனான கழுகும் மறைந்திருந்தன. சிறிது நேரத்தில் குரங்குகள் எல்லாம் மிகவும் உற்சாகத்துடன் தோப்பிற்குள் நுழைந்தன.

அணிலுடன் போட்டியிட குரங்கானது முதலில் வந்து நின்றது.

""அணிலே! நீ என்னை ஏளனம் செய்தபடி அறிவுரை கூறினாயே! நீ எங்கே இருக்கிறாய்? இதோ நானும் என் நண்பர்களும் வந்து இந்தத் தோப்பினை அழிக்கப்போகிறோம்,'' என்றது குரங்கு.

உடனே அணில் மறைவிடத்தில் இருந்த தனது கழுகு நண்பனை நோக்கியது.
""நண்பா! இதுதான் சரியான சமயம்! நாம் தாமதிக்காமல் தாக்குதலைத் தொடங்கிவிட வேண்டியது தான்,'' என்றது அணில்.

உடனே மறைவிடத்தில் இருந்த கழுகுகள் எல்லாம் பறந்து வந்து, குரங்குகளை தாக்கத் தொடங்கின.

குரங்குகளோ அந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஓட்டமெடுத்தன.
அதன் பின்னர் அவைகள் அந்த கொய்யாத் தோப்பு பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை!

கழுகுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபடி அணிலைப் பாராட்டின.

""அணிலே! நல்லறிவோடு செயல்பட்டு அழகான சாகசம் ஒன்றினை நிகழ்த்தி விட்டாய்! எங்களை எல்லாம் அழைத்து வந்து நீ இந்த சாகசச் செயலினை செய்து இங்கே இருக்கும் மரங்களை எல்லாம் காப்பாற்றி விட்டாய்! இந்தப் புண்ணியமானது உன்னைச் சேர்ந்துவிடும்'' என்று கூறியபடி தங்கள் இருப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றன கழுகுகள்.

குட்டீஸ்... அணில் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் புத்தியை பயன்படுத்தி எத்தனை பெரிய சாகசம் செய்துவிட்டது பார்த்தீர்களா.... நீங்களும் அப்படித்தான் இருக்கணும் சரியா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.