Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

புத்திசாலி குரங்கு ! - சிறுகதை


தென்னந்தோப்பு ஒன்றில் ஏராளமான இளநீர்கள் காணப்பட்டன.

ஒருநாள்-
தோப்பின் பக்கமாக வந்த குரங்கு ஒன்று, அந்த இளநீர் காய்களைப் பார்த்தது. அன்று முதல், தினம் தினம் மரத்தில் ஏறி இளநீர்களைச் சாப்பிடத் துவங்கியது. தென்னந் தோப்பில் வசித்து வந்த ஒரு குருவி இச்செயலைக் கண்டது.

""குரங்கே! குரங்கே! நீ தினமும் இளநீர் காய்களைச் சாப்பிடுகிறாய்! தோப்பின் சொந்தக்காரர் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். இந்தத் தோப்புக் காரர் மிகவும் பொல்லாதவர். நீ அவரிடம் அகப்பட்டு விட்டால், அவர் உன்னை கடுமையாக தண்டிப்பார். எனவே, நீ இளநீரை பறித்துச் சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடு,'' என்றது குருவி.

""குருவியே! இளநீர் குடிப்பது எனது திறமை. எனது திறமையை மாற்றிட எவராலும் முடியாது. ஒருவேளை நான் இளநீர் குடிக்கும் நேரத்தில் தோப்புக்காரர் வந்தால் அவரை எவ்வாறு சமாளிக்க வேண்டுமோ அவ்வாறு சமாளித்துக் கொள்வேன். அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப்படத் தேவையில்லை,'' என்றது குரங்கு.

""சரி குரங்கே! ஏதோ எச்சரிக்கை செய்திட வேண்டும்போல் எனக்குத் தோன்றியது. அதனால் எச்சரித்தேன். இனி உனது விருப்பத்தை தடுக்க நான் யார்? நீ உன்னுடைய விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,'' என்று கூறிவிட்டு சென்றது குருவி.

ஒருநாள்-
வழக்கம் போல் குருவி தென்னந்தோப்பு வேலியோரத்தில் அமர்ந்திருந்தது. அந்த நேரத்தில் அங்கே குரங்கும் வந்தது.

"குரங்கே! இன்றும் வழக்கம் போல் இளநீர் குடிக்க வந்துவிட்டாயா?'' என்று கேட்டது குருவி.

குருவியின் விசாரிப்பை கண்டு கொள்ள வில்லை குரங்கு. அது அமைதியாக தோட்டத்தின் உள்ளே சென்றது.

அதே நேரத்தில் வேகமாக தோப்பினுள் நுழையும் அந்தத் தோப்புக்காரரை பார்த்து விட்டது குரங்கு.

"இந்த குருவி கூறியதைப் போன்று நாம் தோப்புக்காரரிடம் மாட்டிக் கொண்டோம். இனிமேல் நம் அறிவைப் பயன்படுத்தி எப்படியாவது சாமர்த்தியமாக தப்பித்திட வேண்டும்' என்று மனதில் எண்ணிக் கொண்டது குரங்கு.

தோப்புக்காரரும் குரங்கைப் பார்த்து விட்டார். உடனே குரங்கு தென்னை மரத்தை சுற்றி, சுற்றி வந்து வணங்கியது.

தோப்புக்காரரோ அந்தக் குரங்கை வியப்புடன் பார்த்து, மெல்ல குரங்கின் அருகில் சென்றார்.

""குரங்கே! என் தோப்புக்குள் நுழைந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்? தென்னை மரத்தைச் சுற்றி சுற்றி வருகிறாயே? எதனால் இப்படி சுற்றி வணங்குகிறாய்?'' என்று கேட்டார்.

குரங்கோ தோப்புக்காரரை வணங்கி நின்றது.

""ஐயா! நான் இந்தத் தோப்பில் நிற்கிற அனைத்து தென்னை மரங்களையும் தெய்வமாகக் கருதுகிறேன். நான் ஒருமுறை தோப்பின் ஓரமாக வந்தேன். அப்போது பசி மயக்கத்தில் இருந்தேன். அந்நேரம் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று வேலியோரமாக விழுந்தது. நான் அந்த தேங்காயை எடுத்து சாப்பிட்டு என்னுடைய பசியைப் போக்கிக் கொண்டேன். அன்று முதல் இந்தத் தோப்பினுள் நுழைந்து ஏதாவது ஓர் தென்னை மரத்தைச் சுற்றி வணங்கி விட்டுத்தான் செல்வேன். இன்று வணங்கும் நேரம் உங்களைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றது குரங்கு.

குரங்கின் பேச்சைக் கேட்ட தோப்புக்காரர் மகிழ்ச்சியடைந்தார். குரங்கை தண்டிக்காமல் விட்டுவிட்டார்.

தோப்பை விட்டு வெளியே வந்த குரங்கை, அழைத்தது குருவி.
"குரங்கே நீ சாமர்த்தியமாகப் பேசுகிறாய்! தோப்புக்காரரும் உன்னுடைய பேச்சை உண்மையென்று நம்பி விட்டார். இது உன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இத்தோடு நீ இளநீர் பறித்துக் குடிப்பதை விட்டு விடு,'' என்றது குருவி.

"குருவியே! நீ மீண்டும், மீண்டும் எனக்கு அறிவுரைக் கூறுவதை விட்டுவிடு! இப்போது எப்படி நான் சாமர்த்தியமாகத் தப்பித்தேன்! அதைப் போன்றே இனிமேலும் சாமர்த்தியமாகப் பேசி தோப்புக்காரரிடமிருந்து தப்பித்துக் கொள்வேன். அதற்காக இளநீர் சாப்பிடுவதை மட்டும் நான் என்றுமே விட்டுவிட மாட்டேன்,'' என்றது குரங்கு.

"இந்தக் குரங்குக்கு சரியான தண்டனை கிடைத்தால்தான் திருந்தும்' என மனதில் எண்ணியது குருவி.

மறுநாள் குரங்கு இன்று எப்படியாவது இளநீர் பருகிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தோப்பினுள் நுழைந்தது.

குரங்கு உள்ளே நுழைவதை வேலியை சரி செய்து கொண்டிருந்த தோப்புக்காரர் பார்த்து விட்டார். உடனே அவர் மறைவிடத்தில் நின்றபடி குரங்கின் செயலைக் கவனித்தார்.

சுற்றும், முற்றும் பார்த்தபடி யாரும் இல்லை என்று நினைத்து, மரத்தில் ஏற முயற்சித்தது குரங்கு.

அந்நேரம் தோப்புக்காரர் வேலியோரத்தில் இருந்து கனமான தடி ஒன்றை கையில் எடுத்து, குரங்கைப் பார்த்து வீசியெறிந்தார். அந்தத் தடியானது குறி தவறாமல் குரங்கின் மீது விழுந்தது. தரையில் விழுந்தது குரங்கு.
உடலில் பட்ட காயத்துடன் மெல்ல எழுந்து ஓட்டமெடுத்தது.

இக்காட்சியைப் பார்த்த குருவி, மறுநாள் குரங்கை சந்தித்தது.

குரங்கோ காலை நொண்டியபடி வந்து கொண்டிருந்தது.

"குரங்கே! உனக்கு என்னாயிற்று? ஏன் இப்படி வருகிறாய்?'' என்று ஒன்றும் தெரியாதது போன்று கேட்டது குருவி.

"குருவியே! என்னதான் சாமர்த்தியமாகப் பேசினாலும், தவறு செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்திடும் என்பதை, நான் உணர்ந்து கொண்டேன்,'' என்றது குரங்கு.

குரங்குக்கு புத்தி வந்ததை நினைத்து மகிழ்ந்தது குருவி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.