Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 9, 2016

இளைஞர்களுக்கு வழிகாட்டும் 'வேலையில்லா பட்டதாரிகள் கடை'


சேலத்தில் உள்ள செரி ரோட்டை  கடந்து செல்லும் அனைவரின் பார்வையையும் திரும்பி பார்க்கும் வகையில் சிறிய பெயர் பலகையில்  "வேலையில்லா பட்டதாரிகள் கடை" என்ற வித்தியாசமான  பெயரில் பேக்(bag), பெல்ட், பர்ஸ்  கடையை நடத்தி வருகிறார் சேலத்தை சேர்ந்த 72 வயதான ராமன்.  வேலையில்லா பட்டதாரி கடை என்பது மட்டுமே இவருடைய  கடையின் விளம்பரமும்  அடையாளமும் ஆகும். கடைக்குள் செல்லும் வழியிலும், கடையின் சுவரிலும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அடங்கியுள்ள சத்து பற்றிய விபரமும் அதனுடைய சிறப்பும், தன்னம்பிக்கை வரிகள்  அடங்கிய பட்டியல்கள் என தொங்கவிட்டு  இருப்பது இந்த கடையின் கூடுதல் சிறப்பு. படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என இருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தில் இருந்து சொந்தமாக கடை நடத்தி வருவருவதன் முலம் மற்ற இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை தந்து கொண்டு இருக்கும் இவரிடம்  சில கேள்விகளை முன் வைத்தோம்.

வேலையில்லாத பட்டதாரி கடை பற்றி சொல்லுங்கள்?

  என்னுடன் படித்த கல்லூரி நண்பர்கள் முப்பது பேர் ஒன்று சேர்ந்து கல்லூரி  படிக்கும் காலங்களிலும், படித்து முடித்த பிறகும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஐந்நூறு என வைத்து  சீசனுக்கு எற்றவாறு, தற்காலிகமாகப் பட்டாசு கடை புத்தக கடை என பல்வேறு வியாபாரங்கள்  செய்து வந்தோம். அதன் மூலம் கிடைத்த  வருமானத்தை கொண்டு, வேலையில்லா பட்டதாரி  கடையை முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். இப்போதைக்கு நான் மட்டுமே கடையை நடத்தி வருகிறேன். ஒரு சிலர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். மற்றவர்கள் தனியாக கடை வைத்து கொண்டனர். வேலையில்லா பட்டதாரிகளுக்கு பை, பெல்ட், பர்ஸ் தைப்பது பற்றியும் இலவசமாக பயிற்சி தருகிறோம் இதற்காக எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை.  இது வரைக்கும் ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு மேல் பயிற்சி தந்து விட்டோம். இனியும் தருவோம். இந்த கடையில் பயிற்சி பெற்றவர்கள் நிறைய பேர் சொந்த தொழிலும் செய்தும் வருகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பை,பெல்ட் மற்றும் பர்ஸ் போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்ற சிறிய புத்தகம் (கையேடு) ஒன்றை தருகிறோம். இது போன்று எந்த கடையிலும் தருவதில்லை.




   
கடைக்கு ஏன் இப்படி வித்தியாசமான பெயர் வைக்க காரணம்?

   கல்லூரி படித்து முடித்த போது இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் நன்பர்களாக இருந்ததால் கடைக்குப் பெயர் வைப்பதில் பிரச்சினை வந்துவிடக்கூடாது என வித்தியாசமாகவும் எங்களுக்குத்  தன்னம்பிக்கை தருவதற்காகவும் இந்த பெயரை வைத்தோம். இந்த பெயரை பார்த்து எங்களை பாராட்டியும் இருக்கிறார்கள். இது போன்ற பாராட்டுகள் தான் எங்களுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. கடையின் பெயரை பார்த்தும் நிறைய வருவார்கள். அப்போ எங்களுடைய நிலைமையும் வேலையில்லா பட்டதாரி என்று இருந்ததும் ஒரு காரணம்.





இங்குள்ள பைகளில்(bag) என்ன ஸ்பெஷல்?

  நாங்கள் பைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் அனைத்தும் தரமான பொருட்கள். தரத்தில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை. இங்கு வாங்கும் பைகள் குறைந்தது மூன்று முதல் நான்கு வருடங்கள் உழைக்கும். பைகளை எளிதாக கையாளுவதற்கு ஏற்றவாறு இரண்டு கைப்பிடிகள் வைத்து இருக்கும். பையின் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ளே வெளியே என்று இரண்டு ஜிப் இருக்கும். பள்ளி கல்லூரி மாணவர்களின் பைகளின் உட்பகுதியில் தன்னம்பிக்கை, தலைவர்களின் பொன்மொழி என பல்வேறு வாசகங்கள் அச்சிடப்பட்டு இருக்கும். இதை அவர்கள் ஒவ்வொரு முறையும்  பார்க்கும் போது அவர்களுக்கு இந்த வாசகங்கள் தைரியம் தன்னம்பிக்கையை தரும். இதுவே பெண்கள் பை என்றால் அழகு குறிப்பு சமையல் குறிப்பு என வாசகங்கள் இருக்கும்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    படித்து முடித்து உடன் வேலை கிடைக்கவில்லை என கவலைப்படக்கூடாது. படிக்கும் காலங்களில் பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். சிறுதொழில்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், அதன் மூலம் தேவையான வருமானத்தை ஈட்ட முடியும். புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொழிலில் வெற்றியோ தோல்வியோ  முயற்சி செய்ய வேண்டும்.  உங்களால் இந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் என சில பொறுப்புகள் உள்ளன அவற்றையும் பார்க்க வேண்டும்.  செய்யும் தொழிலை தெய்வமாக கருத வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.