Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படும் மின்சாரம் இல்லாமல் நாற்று நடும் எளிய கருவி


மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை முத்துப்பேட்டை பள்ளி மாணவி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா. இவர் எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு விட முடியும். இந்த கருவியை உருவாக்க பிளைவுட் ஷீட், போம் ஷீட். சைக்கிள் பிரிவீல், சைக்கிள் செயின், தேவைக்கேற்ற அளவுகளில் சிறிய, பெரிய நட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன், அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு வயலில் மாணவி சரண்யா கருவியை இயக்கி காட்டினார். இதைப்பார்த்த ஆசிரியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மாணவியின் சாதனையை கண்டு வியந்து பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி சரண்யா கூறுகையில், உழவுத்தொழிலை விட்டு வெளியேறி வேறு தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதிகமான பண விரயம். ஆட்கள் பற்றாக்குறை. அதிகமான கூலி, இயற்கை இடர்பாடுகள், எரிசக்தி மூலங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலையை அடைந்துள்ளது. எனவே எரிசக்தி பயன்பாடு இல்லாமல், குறைவான மனித சக்தியை பயன்படுத்தி, குறைவான பொருளாதார மதிப்பீட்டில் நாற்றுநட கருவி உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எங்கள் ஆசிரியர்களின் உதவியோடு இக்கருவியை வடிவமைத்துள்ளேன்.
கருவியை எப்படி உருவாக்கினேன் என்றால், பண்டைய காலத்தில் ஏர் கலப்பை போன்றவற்றை மரத்தில் செய்தே பயன்படுத்தினர்.

குறைவான செலவில் மரப்பலகையைக் கொண்டு ஒரு பெரிய சக்கரம் ஒன்றை செய்தேன். அதனை இரும்பு மையத்தைக்கொண்டு இணைத்தேன். பின்னர் சைக்கிள் செயின் உதவியோடு நான்கு அடி பிளைவுட் ஷீட்டில்  இணைத்தேன். அதை மேலும் கீழும் இயங்குமாறு செய்தேன். மேலும், கீழும் இயங்கும் இடத்தில் நாற்றுகளை அடுக்கி வைக்க  பிளைவுட்டைக் கொண்டு 120 டிகிரி கோண அளவில் பிளைவுட் சாய்வு ஒன்றை தயார் செய்தேன். முன்பக்க பெரிய சக்கரத்திற்கு முன்னால் படகு போன்ற அமைப்பில் பிளைவுட்டை கொண்டு அமைத்தேன். அதில் கயிறு கட்டி இழுப்பதற்கு கம்பி வளையம் அமைத்தேன். பிளைவுட் ஷீட்டின் அடிப்பகுதியிலும், சக்கரங்களிலும் சேறு  பிடித்து கொள்ளாமல் இருக்க போம் ஷீட்டை பயன்படுத்தி ஒட்டி கருவியை உருவாக்கினேன். வழக்கமாக ஒரு விவசாயி 200 நாற்றுகள் நட அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் ஆகும். இந்த கருவியில் 10 நிமிடத்தில் நட்டு விடலாம் என்றார். மாணவியின் இந்த கருவி இன்று நன்னிலத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான “இன்ஸ்பெயர்” அவார்டு போட்டியில் இடம் பெறுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.