Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2017

இன்று தங்கம் விற்கும் விலைக்கு அதை வாங்க முடியாதவர்களுக்கெல்லாம்


 ஃபேன்சி நகைகள்தான் சரியான தேர்வு. சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் தங்க நகைகளை நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை. அதனால்தானோ என்னவோ இந்த செயற்கை நகை தயாரிப்புத் தொழிலுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

ஃபேன்சி நகைகள் விலை குறைவு. அதே வேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கவனத்தை மட்டுமே ஈர்த்து வந்த ஃபேன்சி நகைகள் இப்போது எல்லா தரப்பு பெண்களையும் தேடி வர வைத்துவிட்டது. பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில். இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம். சாதாரண களிமண்ணில் செய்வதுதான் இந்த டெரக்கோட்டா நகைகள்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது. உடல் சூட்டைத் தணிக்கக் கூடியது. மெட்டல் நகைகளைப் போல அலர்ஜியை உருவாக்காதது. எந்த டிசைன், எந்த கலரிலும் செய்யக் கூடியது. எல்லாத்தையும் விட, தோற்றத்தையே கம்பீரமாக மாற்றக் கூடியது. மேலும்  கம்மல்கள் பார்ப்பதற்கு மிக அழகாகவும், அதே நேரம் தற்காலத்தில் பயன்படுத்துவது போன்று வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த நகையை விரும்பி அணிகின்றனர்.

இந்த வாய்ப்பை எல்லாரும் பெறும் வகையில் விசேஷ பயிற்சியை அளித்து வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஷாம்பவி டெரகோட்டா ஜுவல்லரி. தி நகரில் சுப்ரஜா என்பவர் டெரகோட்டா ஜுவல்லரி செய்வது எப்படி என்று வகுப்பு நடத்தி வருகிறார். ‘‘பெரிய முதலீடு இல்லாத எளிய முறையில் லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு குறுந்தொழில் இது. கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கக்கூடிய எளிய தொழில்’’ என்கிறார்.

பிற மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக  வகுப்புகள் எடுத்து வருகிறார். பொறியியலில் முனைவர் பட்டம் முடித்த சுப்ரஜா. 4 ஆண்களுக்கு முன்பு  களிமண் கைவினைப் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்பட்டதனால், 6 மாதங்கள் முறையாக இந்தக் கலையை கற்றுக்கொண்டார். பிறகு மற்றவர்களும் இதைக் கற்று லாபம் பெற வேண்டும் என்று முடிவு செய்து, செங்கல்பட்டில் தன்னுடைய முதல் பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளார்.

சென்னையைத் தாண்டி இருப்பதால் அப்பகுதி பெண்களை தவிர மற்ற பகுதியில் இருந்து வருபவர்களுக்கு சிரமமாக இருந்துள்ளது. இதை உணர்ந்த சுப்ரஜா, சென்னையிலும் தன்னுடைய பயிற்சிப் பள்ளியை விரிவுப்படுத்தினார். ‘‘கல்லூரி மாணவிகள், ஐ.டி பெண் ஊழியர்கள் என அனைவருமே ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார்கள். டெரகோட்டா நகைகளுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு் இருக்கிறது.  கைவினைப் பொருள் என்பதால் வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற டிசைன்களில் ஆர்டர் எடுத்தும் செய்து கொடுக்கிறோம்.

களிமண் எடுத்து அதனை உலர்த்தி பதப்படுத்தவேண்டிய அவசியம் இல்லாமல் ,பதப்படுத்தப்பட்ட டெரகோட்டா அண் கிளே ஸ்டேசனில் கிடைக்கிறது. 10 நிமிடத்தில் 2 நகைகளை செய்து முடித்துவிடலாம். ஆனால் மண் உலர்வதற்கு ஒரு நாள் தேவைப்படும்.  நன்றாக உலர்ந்த பிறகு நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் வர்ணம் தீட்டிக்கொள்ளலாம்’’ என்கிறார் சுப்ரஜா.

ஃபேன்சி நகைகள் மட்டுமல்லாமல் கிஃப்ட் டிசைன்களும் செய்வது பற்றி கற்றுத்தருகிறார். சென்னையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறுகளில் வகுப்புகள் நடத்தி வருகிறார் சுப்ரஜா. தான் செய்யும் நகைகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார். ‘‘பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறோம். கல்லூரி நிகழ்வுகள், சென்னை டிரேட் சென்டர், ஷாப்பிங் காம்ளக்ஸ் போன்ற இடங்களிலும் ஸ்டால் அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.

இதில் எந்த விதமான இடைத்தரகர்களும் இல்லாததால் நேரடியாக மக்களிடம் எடுத்துச் செல்கிறோம். இதனால் எளிமையான முறையில் அதிக லாபத்தை ஈட்ட முடிகிறது. சுமார் 4லிருந்து 45 வாரங்களில் முழுமையாக கற்றுக்கொண்டு சுயமாக தொழில் செய்யத் துவங்கி விடலாம். மேலும் தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்தால்தான் நல்ல லாபத்தை பெற முடியும்’’ என்கிறார்.

கல்லூரி பெண்களிடம் மட்டுமே பெரும் வரவேற்பை பெற்றிருந்த டெரகோட்டா நகைகள் அனைத்துத் தரப்புப் பெண்களும் விரும்பி வாங்கி வருகிறார்கள். ‘‘போதிய விளம்பரங்கள் இல்லாததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் இதனுடைய பலன்களும், இந்த எளிய தொழில் முறையும் பரவலாகாமல் இருக்கிறது. சமூக வலைத்தளம் மூலமாகவே செய்தி அறிந்து தற்போது பெண்கள் வகுப்புகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இது வரை 100க்கும் மேற்பட்ட பேட்ச் மாணவர்கள் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். என்னிடம் கற்றுக்கொண்ட  மாணவர்களும் தனியாகவே வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். நகைகளை செய்வதற்கு மட்டும் கற்றுக்கொள்ளாமல் அதை எப்படி கற்றுக்கொடுப்பது என்பதையும் இங்கு கற்றுக்கொள்கிறார்கள். விற்பனை செய்யக்கூடிய நகைகளின் விலையை எப்படி தீர்மானிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளி்த்து வருகிறோம். தற்போது சென்னையில் டெரகோட்டா ஜூவல்லரி நல்ல வரவேற்ைபப் பெற்றிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்புகொண்டு நியூ மாடல் என்ன இருக்கிறது என்று கேட்டு வாங்கிச்செல்கிறார்கள்’’ என்கிறார் சுப்ரஜா. கல்லூரி மாணவர்களைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் ஆர்வமும் தற்போது அதிகரித்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. “இதில் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் கைவினைப் பொருட்கள் என்பதால் மிகக் குறைவான விலைக்கே கேட்கிறார்கள்.

முதலீடு குறைவு என்றாலும் இதில் உழைப்பு அதிகமாக இருப்பதை அவர்கள் உணர வேண்டும். டெரகோட்டா தவிர மற்ற பொருட்கள் எல்லாமே தரமானதாக பயன்படுத்தி வருகிறோம். டெரகோட்டா நகைகள் விற்கப்படுகின்ற இடங்களைப் பொருத்து அதன் விலை மாறுபடுகிறது. பெரிய கடைகளில் விற்றால் பேரம் பேசாமல் வாங்கிச்செல்கிறார்கள். ஆனால் ஸ்டால் போட்டு விற்பதால் அதனைக் குறைத்து மதிப்பிடுவதுதான் வேதனை அளிக்கிறது’’ என்கிறார் சுப்ரஜா. மண்ணையும் பொன்னாக்கும் இவரது முயற்சி இளம் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.