Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 20, 2016

இலஞ்சியில் முதுமை இனிமையாகிறது...


வயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு,அப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.

யார் அவர்?அப்படி என்ன காரியம் செய்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள செங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.

பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர நிறுவியர்
பணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.

தலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.

இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.

காலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.

இரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.

இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.

மாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது. ஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.

இலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.மேலும் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.

அதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார். இதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.

உணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண கருவிதான் எல்லா பாராட்டும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தை சேர்ந்த டி.சோமசுந்தரம்,ஆர்.வி.துரைசாமி,எஸ்.வேங்கடசுப்பிரமணியன்,பி.கே.சண்முகசுந்தரம்,டி.சோமசுந்தரம்,எஸ்.முததுசாமி,வி.சுப்பிரமணியன்,எஸ்.தெய்வாங்பெருமாள்,குற்றாலிங்கம்,அருணகிரிநாதர்,என்.திருவேங்கடம்,ஆர்.எம்.கணபதி ஆகியோரைத்தான் சாரும், அவர்கள்தான் தேவையான ஆலோசனைளை வழங்கி வழிநடத்தி செல்கின்றனர் என்கிறார் அடக்கமாக.

மகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம், செய்து பாருங்கள் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று சொல்லி முடித்த துரை.தம்புராஜிடம் ஆலோசனை பெறவும் வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9944234499.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.