Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

‘திடுக்.. திடுக்..’ திருப்பூர் பின்னலில் சிக்கும் பெண்களின் வாழ்க்கை


பின்னலாடை தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடிக்குமேல் நாட்டிற்கு வருவாய் ஈட்டித்தருவதோடு, ‘டாலர் சிட்டி’ என்ற கிரீடத்தையும் தாங்கி நிற்கும் பெருமை பெற்ற ஊர், திருப்பூர். ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தாரை வாழ வைத்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த நகரம் தற்போது இந்தியாவையே தன்னைநோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம், தொழிலாளர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் புகலிடமாக மாறி இருப்பது!

1891–ம் ஆண்டு 5 ஆயிரம் மக்களை கொண்ட சிறிய ஊராக இருந்த திருப்பூர், இன்று 8 லட்சம் மக்கள் தொகையோடு ததும்பிக்கொண்டிருக்கிறது.

விவசாயமே முக்கியதொழிலாக இருந்த திருப்பூர், பின்னலாடை நகரமாக மாறிப்போனது ஒருதனிக்கதை. சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக திருப்பூரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரது மகன் எம்.ஜி.குலாம் காதர் 1935–ம் ஆண்டு கொல்கத்தா சென்றார். அப்போது அங்கு ஒரு வீட்டில் கையால் இயங்கக் கூடிய நிட்டிங் எந்திரத்தில் பனியன் துணி உற்பத்தி செய்யப்படுவதை ஆச்சரியத்துடன் பார்த்தார். பின்னர் கொல்கத்தா நகரில் குடிசை தொழிலாக நடந்து வந்த பின்னலாடை தொழிலை நன்கு கற்ற அவர், 1937–ம் ஆண்டு திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னலாடையில் வருமானம் அதிகம் கிடைத்ததால், விவசாயிகளும் பனியன் தயாரிப்பு தொழிலில் ஈடுபட தொடங்கினர். அதனைத் தொடர்ந்து பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் திருப்பூரில் ஏற்படுத்தப்பட்டன. பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு இயற்கையும் கைகொடுத்தது என்றே கூற வேண்டும். திருப்பூர் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகம் இருந்ததால் சாயமேற்றும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. இதனால் வெள்ளை நிற பனியன்களை மட்டுமே தயாரித்து வந்த உற்பத்தியாளர்கள், விதவிதமான சாயங்கள் மூலம் கண்ணைக்கவரும் வண்ணத்துணிகளை உற்பத்தி செய்தார்கள். இதைத்தொடர்ந்து சாய தொழிலும் அசுர வளர்ச்சி பெற்றது. மேலும் நிட்டிங், டையிங், பிளீச்சிங், பேக்கிங், செக்கிங், ரைசிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங் போன்ற பனியன் தொழில் சார்ந்த உப தொழில்களும் சங்கிலித்தொடர் போல் வளர்ச்சி பெற்றன.

உள்நாட்டுக்குள்ளேயே ஆடைகளை அனுப்பி வைத்த பனியன் உற்பத்தியாளர்கள், வெளிநாடுகளுக்கும் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய எண்ணினார்கள். இதைத்தொடர்ந்து 1980–ம் ஆண்டு முதல் ஏற்றுமதி வர்த்தகம் சூடுபிடித்தது. ஆண்டுக்கு ரூ.50 கோடியில் இருந்த ஏற்றுமதி வர்த்தகம் 2003–ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. பருத்தி ஆடைகளை நேர்த்தியாக தயாரிப்பதுடன், உரிய நேரத்தில் ஆடைகளை அனுப்பி வைக்கும் காலந்தவறாத போக்கு வெளிநாட்டு வர்த்தகர்களை திருப்பூரை நோக்கி ஈர்த்தது.


நேற்றைய தொழிலாளர்கள், இன்றைய முதலாளிகளாக உருவாக வாய்ப்பு கிடைத்ததால், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் பல்கி பெருகின. மாநகரில் தற்போது 850 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களும், 6 ஆயிரத்து 250 உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இந்த தொழிலில் 6 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். முன்னேற்றப்பாதையில் சென்ற இந்த தொழில் மூலமாக தற்போது ஆண்டுக்கு ரூ.23 ஆயிரத்து 50 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. உள்நாட்டு பனியன் வர்த்தகம் ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பனியன் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 7 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டு வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்குடன் பின்னலாடை உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் பின்னலாடை நிறுவனங் களுக்கு தொழிலாளர்களின் தேவை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

திருப்பூர் பனியன் தொழில் 1980–ம் ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்த மாவட்டங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக திருப்பூர் நோக்கி குடிபெயர்ந்தனர். இரவு, பகலாக வேலை நடக்கும் பனியன் தொழில் நிறுவனங்களில் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வெளிமாவட்ட தொழிலாளர்கள் கைநிறைய சம்பாதித்தனர்.

குடும்பத்துடன் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வாடகைக்கு வீடு தேடினார்கள். தாங்கள் பணிபுரியும் பனியன் நிறுவனங்களுக்கு அருகிலேயே வீடு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால் கேட்ட பணத்தை வாடகையாக கொடுத்து தொழிலாளர்கள் குடியேறினார்கள். இதன்காரணமாக வெளிமாவட்ட தொழிலாளர்களின் சொந்த விவரங்களை பெறாமல் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் குடியமர்த்தினார்கள்.

மாநகருக்குள் பனியன் தொழில் நிறுவனங்கள் இரண்டறக்  கலந்து இருப்பதால் வீதிக்கு ஒரு டீக்கடை இருப்பதும், அதில் தேனீக்கள் போல் தொழிலாளர்கள் நிறைந்து இருப்பதும் வாடிக்கையான ஒன்றானது. அதுபோல் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நாளொன்றுக்கு ரூ.4 கோடியாக உள்ளது. பின்னலாடை வர்த்தகத்தில் மட்டுமில்லாமல் மதுவிற்பனையிலும் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் வெளிமாவட்ட தொழிலாளர்களில் பலர் சொந்த ஊரில் இருந்து திருப்பூர் திரும்புவதில் காலதாமதம் செய்தனர். அந்தகால கட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஆர்டர்களை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் வடமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை திருப்பூர் நோக்கி அழைத்து வர தொடங்கினார்கள்.

குறிப்பாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வந்தனர். சொந்த மாநிலத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட அவர்கள் குறைந்த ஊதியம் கிடைத்தாலே போதும் என்று பனியன் நிறுவனங்களில் அலைஅலையாக குவிந்தனர். குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பு வடமாநில தொழிலாளர்கள் மூலம் கிடைத்ததால் பனியன் உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனங்களில் அவர்களை பணிக்கு அமர்த்துவதில் முனைப்பு காட்டினார்கள்.

வடமாநில தொழிலாளர்களிடம் தங்கள் ஊரில் இருந்து மேலும் தொழிலாளர்களை அழைத்து வருமாறு பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறினார்கள். நாளடைவில் வடமாநில தொழிலாளர்கள் கும்பல், கும்பலாக ரெயில் மூலம் திருப்பூரில் வந்து குவிந்தனர். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கு அறை வசதி, உணவு வசதி செய்து கொடுத்து தங்க வைத்து தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வைத்தனர். இதனால் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.